Monday 11 April 2016

அங்கக வேளாண் பண்ணை -அனுபவ விவசாயியின் பகிர்வு - III (கோவை வணிகம் மாத இதழ்)

அங்கக வேளாண் பண்ணை -அனுபவ விவசாயியின் பகிர்வு - II (கோவை வணிகம் மாத இதழ்) பதிவின் தொடர்ச்சி...

பாக்கு
2010ல் பாக்குத் தோப்பு அமைத்து அதில் வாழை ஊடுபயிர் செய்தேன். மொத்தம் 10 ஏக்கர் விவசாய நிலத்தில், 7 1/2 ஏக்கர் நிலத்தில் பாக்கு (மோகித் ரகம்), தென்னை பயிரிட்டுள்ளேன். 2 1/2 ஏக்கர் நிலம் குத்தகைக்கு எடுத்து பூவன் சாகுபடியும் செய்துள்ளேன். பாக்கை கடந்த இரண்டு வருடங்களாக அறுவடை செய்து வருகிறேன். நாட்டுப் பாக்கு ரகங்கள் 7வது வருடத்திலிருந்து பலன் அளிக்கும், ஹைபிரிட் ரகங்கள் 4வது வருடத்திலிருந்தே பலன் அளிக்கிறது. இவர் பயிர் செய்துள்ளது ஹைபிரிட் ரகம். பாக்கிற்குள் ஊடு பயிராக ஜி9 வாழையை பயிரிட்டுள்ளேன்.
Image & Article courtesy : kovaivanigam.com
பொழியும் மழை நீரை முழுமையாக அறுவடை செய்திட வரப்புகளையும் பார்களையும் உயரமாக ஏற்படுத்தியுள்ளேன் (8 அடி அகலத்தில் கனமாக மண் கொண்டு வரப்பு அமைத்தால் 5 அடி உட்பகுதி கிடைக்குமாறும், 15 அடி நீளத்தில் குறுக்காகக் கனமாகவும் வரப்பு அமைத்துள்ளேன்)  . இது பார்ப்பதற்கு பெட்டி போல் காட்சியளிக்கும். இந்தப் பெட்டிக்குள் காய்ந்த இலை சருகு, எரு… போன்றவைகளை இட்டு களை எடுக்கும் போது மண் கொண்டு மூடிவிடுவோம். வருடத்திற்கு ஒரு முறை களையயடுப்போம். களையயடுப்பு விவசாய வேலை ஆட்களைக் கொண்டே செய்கிறேன். இவைகள் மண்ணிற்கு நல்ல உரமாகின்றன. இதனால் இரண்டு பயன்கள்,
1. நிலத்தடி நீர்மட்டம் உயரும்,
2. இடும் உரங்களை (எருக்களை – மாட்டு எரு, ஆட்டுப் பிழுக்கை) மழை நீர் அடித்துச் செல்லாது இருக்கும். மாட்டுச் சாணம் 1 வருடத்திற்கு, 1 ஏக்கருக்கு 30 டன் இடுகிறேன். 1 டன் மாட்டு எருவின் விலை ரூ.1,000/-. ஆட்டுப் பிழுக்கை 1 டன் ரூ.3,000/- 1 ஏக்கருக்குப் பாக்கு முதல் வருட அறுவடையாக 5 1/2 டன்னும், இரண்டாவது வருடம் 10 டன் பாக்கும் அறுவடை செய்தேன். பாக்கு 3 1/2 ஏக்கர் பயிர் செய்யப்பட்டுள்ளது. 2 1/2 ஏக்கர் அளவுள்ள பாக்குகளே பலனுக்கு வந்துள்ளது, மீதம் உள்ள பாக்கு மரங்கள் எதிர் வரும் காலங்களில் அறுவடைக்குத் தயாராகும் என்றார்.
பாக்கு மரங்களின் இடைவெளி 8 அடிக்கு 8 அடி, முக்கோண வடிவில் நடவு செய்துள்ளார். முக்கோண வடிவில் பயிரிடுவதால் எண்ணிக்கை அதிகமாகிறது. இது போல் பயிர் செய்வதால் ஏக்கருக்கு 100 நாற்றுகள் அதிகமாகப் பயிரிடமுடியும்.
உதாரணமாக: 8 x 8 = 64 சதுரஅடிக்கு ஒரு பாக்கு நாற்று, 8 x 7 = 56 சதுர அடிக்கு (முக்கோண வடிவு) ஒரு பாக்கு நாற்று நடவு செய்யலாம். 1 ஏக்கருக்கு 777 (43560 / 56) பாக்கு நாற்றுகள் நடவு செய்துள்ளார்.
பாரம்பரிய ரகத்தினைப் போல் இந்த ரகம் இல்லை. இந்த ரகப் பாக்கினை உடனடியாக விற்றுவிட வேண்டும், பாதுகாத்து (Storage Quality) வைத்து விற்பது இதில் முடியாது என்கிறார். அதே போல் சுவை, ஆரோக்கியம்… போன்றவைகளிலும் பாரம்பரிய ரகத்தைப் போல் வருவதில்லை.
1 வருடத்திற்கு, 1 ஏக்கருக்கு பாக்கு தோப்பிற்கு ரூ.50,000/-க்கு செலவுக் கணக்கு.
3 லோடு எருவிற்கு ரூ.30,000/-
களை எடுப்பதற்கு ரூ.10,000/-
நுண்ணுயிர் உரங்களுக்கு ரூ.10,000/-
1 வருடத்திற்குப் பாக்கின் வரவு 10 டன் (20 டன்னிற்கு கொண்டு வருவது இலக்கு என்கிறார்)
இன்றைய சந்தை விலை 1 கிலோ – ரூ.27-30.
சராசரியாக விலை ரூ.28/- என்று கணக்கிட்டால் = ரூ.2,80,000/- வரவு

ரூ.2,80,000 – ரூ. 50,000 = நிகர லாபம் ரூ.2,30,000/-

பாக்கு மட்டையில் வருமானம் தனி, 1 வருடத்திற்கு 3 1/2 ஏக்கருக்கும் சேர்த்து ரூ.60,000/- வரை கிடைக்கின்றன. 5வது வருடம் முதலே பாக்கில் வருவாய் வர ஆரம்பிக்கும். இந்த 5 வருடங்களும் இவர் ஊடு பயிராக வாழை நடவு செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. 1 ஏக்கருக்கு சுமார் 700 வாழைக் கன்றுகள் நடவு செய்து பலன்அடைந்துள்ளார். 5 வருடங்களில் கதளி, நேந்திரன், குவிண்டால் நேந்திரன், சாம்பிராணி / கற்பூர வள்ளி… போன்றவைகளைப் பயிர் செய்துள்ளேன்.

சராசரியாக தார் ஒன்று ரூ.250/- என்று விற்றுள்ளேன்.
ஜி9 அதிகபட்சமாக 52 கிலோ குறைந்தபட்சமாக 30 கிலோவும் கிடைத்தது. சராசரியாக 35- 40 கிலோ எடையுடன் கிடைத்துள்ளது.
கதளி சுமார் 12 – 14 கிலோ எடை கிடைத்தது.

குவிண்டால் நேந்திரன் அதிகபட்சமாக 48 கிலோவும் குறைந்த பட்சமாக 20 கிலோவும் எடை வந்தது. இந்தச் சூழ்நிலையில் குவிண்டால் நேந்திரன் 1 கிலோ ரூ.40/-க்கு விற்றது. செலவு என்று கணக்கிட்டால் ஒரு வாழைக்கு ரூ.100/- வரை வந்தது.

இதுவரை வாழையில் வருமானம் கிடைத்தது, இந்த வருடம் முதல் தோப்பில் நிழல் விழுவதால் வாழை ஊடு பயிர் செய்வதை நிறுத்தத் திட்டமிட்டுள்ளேன். இனி ஊடு பயிராக மிளகுக் கொடி பயிர் செய்திடுவேன்.

அங்கக வேளாண் முறையில் மிளகுச் சாகுபடிக்கு, மருத்துவத்துறையில் நல்ல வரவேற்பு உள்ளது. ஆகவே தான் அங்கக வேளாண் முறையைப் பதிவு செய்யத் திட்டமிட்டேன்.
மேலும், மரம் ஏறி பாக்கு பறிப்பதை நிறுத்தி பழப் பாக்கை அறுவடை (மரத்தில் இருந்து விழும் பாக்கினை) செய்திடவும் திட்டமிட்டுள்ளேன். பச்சைப் பாக்கை விட பழப் பாக்கிற்குச் சந்தை விலை கூடுதலாக உள்ளதே இதற்குக் காரணம். பழப் பாக்கை இரண்டு வருடம் வைத்து விற்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

பச்சைப் பாக்கு – சூர் பாக்கு, வெட்டுப் பாக்கு போன்றவைகளுக்குப் பாக்கு, பதமாக இருத்தல் வேண்டும்.
பழப் பாக்கு – காய வைத்து சேமித்து வைக்க முடியும். மேல் தோல் எடுக்காத வரை 5 வருடங்கள் வரை சேமித்து வைத்துக் கொள்ள முடியும். மேல் தோல் எடுத்தால் 6 மாதத்திற்குள் பயன்படுத்திட வேண்டும்.

பாக்குத் தோப்பிற்கு எரு இடும் முறை. கனமாக வரப்புகள் அமைத்துள்ளதால் இயந்திரங்களைக் கொண்டு செல்வது சாத்தியம் இல்லை. ஆகவே, கழுதைகள் மூலமாக எருக்களைத் தோப்பிற்குள் கொண்டு சேர்க்கிறோம் என்றார். களத்திலிருந்து ஒவ்வொரு கழுதையின் மீதும் சுமார் 50 கிலோ முதல் 60 கிலோ வரை சாக்குப் பை (இரண்டு முதல் மூன்று சாக்கு பைகளை ஒன்றாக தைத்துக் கொள்ள வேண்டும்) மூலமாகக் கொண்டு ஒவ்வொரு பெட்டிக்கும் சேர்க்கப்படுகின்றன.
1 லோடு (10 டன்) எருவை தோப்பிற்குள் கொண்டு சேர்ப்பதற்குக் கழுதை மற்றும் ஆட்களுக்கான கூலி ரூ.1,500/-.    எருக்களைப் பரப்பி விட்டு, களை எடுப்பதற்குத் தனிக் கூலி என்கிறார்.
தென்னை
3 ஏக்கர் தென்னை அமைத்துள்ளேன். தென்னை (தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நெட்டை ரகம்) பயிரிட்டு 25 வருடங்களாகின்றன.தென்னையில் ஊடு பயிராகக் கதளி வாழை நடவு செய்யப்பட்டுள்ளது. தென்னையில் ஊடு பயிராக நிழலில் வரும் வாழையின் எடை குறைவாகவே இருக்கும். தென்னைக்கு இடைவெளி 26 அடி. 3 ஏக்கரில் சுமார் 220 (1 ஏக்கருக்கு 72 தென்னை – 26 அடிக்கு 23 அடி) தென்னை பயிர் செய்யப்பட்டுள்ளன, முக்கோண வடிவில் நடவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது (43560 / 598 – 43560 சதுர அடி = 1 ஏக்கர்). 2014ம் வருடத்தில் தேங்காய் 1 கிலோ (உறித்த தேங்காய்) ரூ.34/-க்கு விற்கப்பட்டது. இன்றைய சந்தை விலை ரூ.15/-. விலை குறைந்து விட்டது என்று விவசாயிகள்  எண்ணாமல் உற்பத்திச் செலவைக் குறைத்து உற்பத்தியை அதிகரிக்கும் வழியைக் கண்டறிய வேண்டும். இது தொழில்நுட்பம் மூலம் சாத்தியமே என்கிறார். தொழில்நுட்பத்தை விவசாயி முழுமையாக பயன்படுத்திட வேண்டும். விலையின் ஏற்றத் தாழ்வினை ஈடு செய்ய, இதுவே சிறந்த வழி. சந்தை நிலவரத்தைப் பொறுத்தே விலை அமையும், விலை நிர்ணயம் என்பது விவசாயி கையில் இல்லை. ஆனால், குறைந்த செலவில் அதிக உற்பத்தி என்பது விவசாயி கையில் மட்டுமே. நாம் செய்ய வேண்டியது உற்பத்தியை அதிகப்படுத்துவது, உற்பத்தியை அதிகப்படுத்த இரசாயனங்களைப் பயன்படுத்தினால் மரம் பட்டுப்போகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
2 தென்னை மரங்களுக்கு நடுவே 1 வரிசையில் 7 அடி இடைவெளி விட்டு கதளி வாழை (20 நாள் வயது) பயிரிட்டுள்ளேன். ஜாதிக்காய் நிழலில் பலன் தரக்கூடியது, இதனை நடவு செய்வதற்குக் குழி எடுத்து வைக்கப்பட்டுள்ளது. ஜாதிக்காய் 25 வருடம் முதல் 40 வருடம் வரை பலன் தரக்கூடியது. 7 வருடங்களில் இருந்து பலன் கிடைக்கும். ஜாதிக்காய் மற்றும் ஜாதிப்பத்தரி மருத்துவ குணம் உடையது. தென்னை மரங்களின் வரிசையில், இரண்டு தென்னைக்கு நடுவே ஜாதிக்காய் நாற்று நடவு செய்ய உள்ளார். மரத்தினை நன்றாகப் பராமரித்தால் வருடத்திற்கு ஒரு ஜாதிக்காய் மரம் ரூ.2000/- வரை வருமானம் தரக்கூடியதாக உள்ளன என்று தான் அறிந்ததை நம்முடன் பகிர்ந்தார்.
இயற்கை இடுபொருட்களை வைத்து உற்பத்தியை அதிகப்படுத்தினால் மரம் ஆரோக்கியத்துடனும் நீண்ட நாட்களும் இருக்கும். மகரந்த சேர்க்கைக்குத் தேனீப் பெட்டிகள் வைக்கவும் திட்டமிட்டுள்ளேன். இனி வரும் காலத்தில், தென்னை பாக்கு என இரண்டிலும் விழும் காய்களை மட்டுமே சேகரித்து விற்பனைக்குக் கொண்டு  செல்லத் திட்டமிட்டு வருகிறேன்.
உழவர் உற்பத்தியாளர் கம்பனி
எங்கள் பகுதியில் இருக்கும் விவசாயிகள் ஒன்றிணைந்து உழவர் உற்பத்தியாளர் என்கிற கம்பனியை நடத்திவருகிறோம். இதில் சுமார் 1400 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். உறுப்பினர்கள் உற்பத்தி செய்யும் பாக்கு மற்றும் தேங்காய்களை மார்கெட்டிங் செய்து கொடுக்கிறோம். எங்கள் நிறுவனம் எந்தவொரு இரசாயனப் பொருளும் கலக்காத (சல்பர் கலக்காத) தேங்காய் எண்ணையை உற்பத்தி செய்து சந்தையில் விற்று வருகிறோம். சுகாதாரமான பொருட்கள் அங்காடிகளில் கிடைப்பதென்பது குறைவு, அந்த இடத்தை நிரப்பவே நாங்கள் பாடுபடுகிறோம். இதனால் எங்களுக்கு (விவசாயிக்கு) விலையும் நுகர்வோருக்கு ஆரோக்கியமும் நிலையானதாகவும் தரமானதாகவும் கிடைக்கும் என்பதில் கூடுதல் மகிழ்ச்சியே.
விவசாயி திரு.L.விஸ்வநாதன் அவர்கள், உழவர் உற்பத்தியாளர் கம்பனியில் சேர்மேனாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆயுர்வேத மருத்துவத்திற்கு தேங்காய் எண்ணையின் தேவை அதிகமாக உள்ளது. எங்களின் 5 வருட இலக்கானது உறுப்பினர்களின் தேங்காய்களை, தேங்காயாக விற்காமல் மதிப்பு கூட்டுப் பொருளாக விற்பதே என்றார்.
தற்போது என்னிடம் இருப்பது சீமை மாடுகளே, அதில் 3 மாடுகள் கறவையிலும் 2 மாடுகள் சினையாகவும் இருக்கின்றன. இதற்கு முன்பு பஞ்சகவ்யா, ஜிவாமிர்தம்… போன்றவைகளை சீமை மாடுகளிடமிருந்து கிடைக்கப் பெற்ற சாணம், கோமியத்திலிருந்தே தயாரித்து உரமாகக் கொடுத்து வந்தேன். இன்னும் சில தினங்களில் நாட்டு மாடுகள் வாங்கி விவசாயத்திற்கும் பால் உற்பத்திக்கும் பயன்படுத்திட முடிவு செய்துள்ளேன் என்றார் மகிழ்ச்சியுடன்.

நன்றி : கோவை வணிகம் மாத இதழ்

No comments:

Post a Comment