Tuesday 12 April 2016

உவர் நீரில் ஒருங்கிணைந்த பண்ணையம்

வானம் பார்த்த பூமியில் உவர் நீரில் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயத்தின் மூலம் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் ஓசையின்றி சம்பாதிக்கிறார், ராமநாதபுரம் வழுதூரைச் சேர்ந்த விவசாயி த.சிவா. பிளஸ் 2, கம்ப்யூட்டர் பயிற்சி முடித்து 2000ல் துபாய் சென்றேன். டிரைவராக 10 ஆண்டு வேலை செய்துவிட்டு ஊர் திரும்பினேன். மீண்டும் அங்கு செல்ல விருப்ப மில்லை. சொந்த கிராமத்திலேயே முன்னேற விரும்பினேன். எனது மூன்றரை ஏக்கர் நிலமான வறண்ட பூமியில் உவர் நீரில் இயற்கை விவசாயத்தின் மூலம் சாதிக்க முடிவு செய்தேன்.
Image courtesy : wikipedia, article courtesy : Dinamalar
ராமநாதபுரம் தோட்டக்கலை துறை, குயவன்குடி வேளாண் அறிவியல் மைய அதிகாரிகளை தொடர்பு கொண்டேன். அவர்க ளுடைய ஆலோசனையின் பேரில் காய்கறி, கீரை, தேனீ, மீன் வளர்ப்பில் ஈடுபட்டேன். எங்கள் வீட்டில் வளரும் ஆடு, மாடு, கோழிகளின் கழிவுகளில் இருந்து இயற்கை உரம் தயாரித்தேன். இதனால் காய்கறி, கீரைகள் சுவையாகவும் பசுமை மாறாமலும் உள்ளன. 15 தென்னை மரங்கள், பங்கனபள்ளி, செந்தூரன், கல்லாமை உட்பட 25 வகை ஒட்டு மாமரங்கள், யாழ்ப்பாணம், நாட்டு வகைகளைச் சேர்ந்த 100 முருங்கை மரங்கள், 5 வகை கீரைகள் சாகுபடி செய்துள்ளேன்.

தேங்காய் மூலம் 45 நாளுக்கு ஒரு முறை ரூ.4,500 மா மற்றும் முருங்கை மரங்களிலிருந்து ஆண்டுக்கு தலா ரூ.12 ஆயிரம், தேன் மூலம் ஆண்டுக்கு ரூ.18ஆயிரம், கீரைகளில் இருந்து 6 மாதத்திற்கு ஒருமுறை ரூ.6 ஆயிரம், கோழி முட்டையிலிருந்து தினமும் ரூ.60, மீன்வளர்ப்பு மூலம் ஆண்டுக்கு ரூ.24 ஆயிரம், பசும்பால் மூலம் கணிசமான வருவாய் கிடைக்கிறது.

பரண் மேல் ஆடு வளர்க்கவும் மண்புழு உரம் தயாரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளேன். செயற்கை விவசாயத்தில் ஆண்டு முழுவதும் வருமானம் ஈட்ட முடியாது. காய்கறி சாகுபடியை தனியாக செய்தால் நிரந்தர வருமானம் கிடைக்கும். இயற்கை விவசாயத்தில் மட்டுமே நல்ல லாபம் அடைய முடியும். அனைத்து விவசாயிகளும் இயற்கை விவசாயத்திற்கு திரும்ப வேண்டும். இயற்கை விவசாயத்தில் ஆர்வமுடையோருக்கு அரசின் சலுகைகள் தாமதமின்றி கிடைக்க வேண்டும், என்றார்.

நன்றி: தினமலர் விவசாய மலர்

No comments:

Post a Comment