Friday 1 April 2016

செண்டுமல்லி பயிரிட்டால் வருடம் முழுவதும் வருமானம்


Image & article courtesy : Dinamani
தோட்டக்கலை பயிர்களிலேயே அதிக அளவில் தினமும் வருவாய் தரக்கூடியதும், ஆண்டு முழுவதும் மகசூல் கொடுக்கக் கூடியது மலர்ப் பயிர்கள் மட்டுமே. அதிலும், உதிரி மலர்கள் வரிசையில் வருவாயை அதிக அளவில் அள்ளிக் கொடுப்பது செண்டுமல்லி ஆகும்.
 களர், உவர் நிலங்கள் அல்லாத அனைத்து வகை நிலங்களிலும் வளரக்கூடிய செண்டுமல்லியைப் பயிரிடுவதும், பாதுகாப்பதும் எளிமையானது என்பதால் விவசாயிகள் அதிகம் விரும்பக்கூடிய மலர்ப்பயிர் செண்டுமல்லி விளங்குகிறது.

 செண்டுமல்லியில் பலவித ரகங்கள் உள்ளன. அவை எம்.டி.யு.1, உள்ளூர் மஞ்சள், ஆரஞ்சு வகைகள், பூசா நரங்கி கெய்ன்டா, பூசா பசந்தி கெய்ன்டா ஆகியனவாகும்.

 மண், தட்பவெப்ப நிலை: நல்ல வடிகால் வசதியுடன் கூடிய அனைத்து வகை மண்ணிலும் பயிரிடலாம். கார அமிலத் தன்மை 6.0 முதல் 7.5 வரை இருக்கவேண்டும். களர், உவர் நிலங்கள் சாகுபடிக்கு ஏற்றதல்ல. செண்டுமல்லிக்கு சீரான மிதவெப்ப நிலை அவசியம். சமவெளி, மலைப் பிரதேசங்களில் பயிரிடலாம்.
 நிலம் தயாரித்தல்: நிலத்தை நன்கு உழுது கடைசி உழவின்போது ஹெக்டேருக்கு 25 டன் மக்கிய தொழு உரம் இட வேண்டும். பின்னர் 15 செ.மீ. இடைவெளியில் பாத்திகள் அமைக்க வேண்டும். விதைகளைப் பொருத்தவரை செண்டுமல்லிக்கு ஹெக்டேருக்கு ஒன்றரை கிலோ விதை தேவை. செண்டுமல்லியைப் பயிரிட குறிப்பிட்ட காலம் தேவையில்லை. ஆண்டு முழுவதும் பயிரிடலாம். இருந்தாலும் ஜூன், ஜூலை மாதங்கள் நடவு செய்ய மிகவும் ஏற்றது.

நாற்றங்கால் தயாரித்தல்: நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழுது, கடைசி உழவின்போது மக்கிய தொழு உரம் இட்டு மண்ணோடு நன்கு கலக்கிவிட வேண்டும். விதைகளை 200 கிராம் அசோஸ்பைரில்லம் கொண்டு நேர்த்தி செய்த பிறகு 15 செ.மீ. இடைவெளியில் விதைகளை வரிசையாக பாத்திகளில் விதைத்து மண் கொண்டு மூடி, உடன் நீர்ப் பாய்ச்ச வேண்டும். விதைகள் 7 நாள்களில் முளைத்து விடும். 30 நாள்கள் ஆனவுடன் நாற்றுக்களைப் பிடுங்கி நடவு செய்ய வேண்டும்.

நடவு: வரிசைக்கு வரிசை 45 செ.மீ., செடிக்கு செடி 30 செ.மீ., இடைவெளியில் நாற்றுகளை நட வேண்டும். வயதான நாற்றுகளைத் தவிர்த்துவிட்டு நல்ல வாளிப்பான ஒரு மாத வயதான நாற்றுகளையே நடவு செய்ய வேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை: ஒரு ஹெக்டேருக்கு 45 கிலோ தழைச்சத்து, 90 கிலோ மணிச்சத்து, 75 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய  உரங்களை அடியுரமாக இட வேண்டும். நட்ட 45 நாள்கள் கழித்து ஹெக்டேருக்கு 45 கிலோ தழைச்சத்து கொடுக்கக்கூடிய  உரத்தை இட்டு மண் அணைக்க வேண்டும். தேவை ஏற்படும்போது கண்டிப்பாக களை எடுக்கவேண்டும்.

நீர் நிர்வாகம்: நட்டவுடன் முதல் தண்ணீரும், பிறகு மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீரும் பாய்ச்ச வேண்டும். பிறகு வாரம் ஒரு முறை நீர்ப் பாய்ச்ச வேண்டும். நீர் தேங்குவதைத் தவிர்க்க வேண்டும். நுனி கிள்ளுதல் பணியை செவ்வனே செய்தால் கிளைகள் வளருவதில் தடை இருக்காது. நட்ட 30 நாள்களில் செடியின் நுனிப்பகுதி அல்லது முதல் பூ மொட்டுகளை கிள்ளி எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் கிளைகள் அதிகம் தோன்றி அதிகமான பூ மொட்டுகள் உண்டாகும்.


 அறுவடை: செடியின் வயது 130 முதல் 135 நாள்கள் ஆகும். நட்ட 60-ஆம் நாளில் இருந்து பூக்க ஆரம்பித்துவிடும். 80 முதல் 90 சதவீதம் வரை மலர்ந்த பூக்களை 3 நாள்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம். ஒரு ஹெக்டேருக்கு 18 டன் பூக்கள் வரை மகசூல் கிடைக்கும்.

 செண்டுமல்லியைப் பொருத்தவரை சந்தைப்படுத்துதல் மிகவும் எளிது. கிராமங்களுக்கு அருகில் இருக்கும் சிறிய நகரங்களிலும் செண்டுமல்லிக்கு தேவை இருக்கும். சிரமம் பார்க்காமல் பெரிய நகரங்களுக்கு எடுத்துச் சென்றால் அதிக வருமானம் பார்க்கலாம்.

 செண்டுமல்லி பயிரிடுவது குறித்து மேலும் விவரங்கள் தேவைப்படுவோர் தங்களது வட்டாரங்களில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களுக்குச் சென்று அங்கிருக்கும் தோட்டக் கலைத் துறை உதவி வேளாண் அலுவலர்களை அணுகலாம். மேலும், வட்டார தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநர் அலுவலகங்களில் செண்டுமல்லிக்குத் தேவைப்படும் விதைகளையும், பயிரிடுவது குறித்த ஆலோசனைகளையும் பெறலாம்.

source : dinamnai

No comments:

Post a Comment