Monday 22 February 2016

வலி, வீக்கத்தை போக்கும் புளிச்ச கீரை : (தினகரன்)


கட்டிகளை ஆற்ற கூடியதும், பித்தத்தை போக்கவல்லதும், உடல் வலி, வீக்கத்தை குணமாக்கும் தன்மை கொண்டதும், பசியை தூண்டக் கூடியதுமான புளிச்ச கீரையை பற்றி பார்ப்போம்.  புளிச்ச கீரையில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. சமையலில் பயன்படுத்த கூடியது இது, அற்புதமான மூலிகையாக விளங்குகிறது. மேல் பூச்சு மருந்தாகவும் பயன்படுகிறது. உள் உறுப்புகளுக்கு புத்துணர்வு கொடுக்க கூடியது. வலி, வீக்கத்தை போக்கும். புண்களை ஆற்றக் கூடிய தன்மை கொண்டது.புளிச்ச கீரையில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. தோல், எலும்புகள் பாதிப்படைவதை தடுக்கிறது. ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. புளிச்ச கீரையை நன்றாக அரைத்து, பூசுவதால் கட்டிகள் விரைவில் கரையும்.
Image & Article courtesy : Dinakaran.com

புளிச்ச கீரையின் பூக்களை பயன்படுத்தி இருமலுக்கான மருந்து தயாரிக்கலாம். பூக்களை நசுக்கி சாறு எடுக்கவும். ஒரு ஸ்பூன் சாறில், 2 சிட்டிகை மிளகுப் பொடி, ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலக்கவும். இதை சாப்பிட இருமல் சரியாகும். சளியை கரைத்து வெளியேற்றும். சுவாச கோளாறை போக்குகிறது. வயிற்றில் அமிலத்தன்மை குறையும்போது பசி இல்லாமல் போகிறது. புளிச்ச கீரை பசியை தூண்டும். நோய் எதிர்ப்பு சக்தி உடையது.புளிச்ச கீரையின் மொட்டுக்களை பயன்படுத்தி வாய் கசப்பு, வாந்திக்கான மருந்து தயாரிக்கலாம்: இதற்கு தேவையான பொருட்கள்: புளிச்ச கீரை மொட்டுக்கள், மிளகுப் பொடி, தேன். சுமார் 10 மொட்டுக்களை எடுத்துக் கொள்ளவும். ஒரு டம்ளர் விட்டு கொதிக்க வைக்கவும். வடிக்கட்டிய பின் உப்பு, மிளகு, தேன் சேர்த்து கலந்து குடித்தால் தலைசுற்றல் சரியாகும். பித்த வாந்திக்கான மருந்தாகிறது.

பல்வேறு நன்மைகளை கொண்ட இந்த கீரை புளிப்பு சத்தை உடையது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. வயிற்று புண்களை ஆற்றும். பித்தத்தினால் ஏற்படும் வாந்தி, அரிப்பு, மயக்கம் ஆகியவற்றுக்கு மருந்தாகிறது. பித்த சமனியாக விளங்குகிறது. புளிச்ச கீரையை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் இதய நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது. புளிச்ச கீரையை பயன்படுத்தி சூப் தயாரிக்கலாம்: தேவையான பொருட்கள்: புளிச்ச கீரை, பட்டை, பூண்டு, வெங்காயம், நல்லெண்ணெய், மிளகுப்பொடி, உப்பு.

பாத்திரத்தில் நல்லெண்ணெய் காய்ந்தவுடன் ஒரு துண்டு பட்டை, 2 பல் பூண்டு தட்டி போடவும். வெங்காயம் வதங்கியவுடன் புளிச்ச கீரையை சேர்த்து வதக்கவும். உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். வடிகட்டி மிளகு பொடி சேர்த்து குடித்துவர உடல்நலம் பெறும். புளிச்ச கீரை உன்னதமான உணவு மற்றும் மருந்தாகிறது. ஊடு பயிராக பயிரிடப்படும் இது வாயு கோளாறுகளை போக்கும். சத்து குறைபாட்டினால் ஏற்படும் எலும்புருக்கி நோயை குணமாக்கும். வாந்தியை நிறுத்த கூடியது. மலச்சிக்கலை போக்கும் தன்மை கொண்டது. சிறுநீரக கோளாறுகளை போக்கும். சிறுநீர் பெருக்கியாக உள்ளது.

நன்றி : தினகரன்

No comments:

Post a Comment