Wednesday 8 March 2017

தேனீ ஒரு ஆச்சரிய படைப்பு : தேனீ வளர்க்கலாம் வாங்க பகுதி-III

தேனீக்களோட வாழ்க்கை முறையைப் பார்த்தா... 'நாங்கள்லாம் ஆறறிவு படைச்சவங்கப்பா...'னு சொல்லிக்கறதுக்கே நாம யோசிப்போம். ஒரு கூட்டிலிருக்குற ஆயிரக்கணக்கான தேனீக்கள்ல ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு குழுவை அமைச்சு, மனுஷனைவிட அபாரமா செயல்படுதுங்க தேனீக்கள். 


கூட்டிலிருந்து எந்தத் திசையில, எவ்வளவு தூரத்தில, எந்தப் பூவுல தேன் இருக்குதுங்கிறதைப் பார்த்துட்டு வந்து, அதை நடன மொழியில சொல்றதுக்காக செய்தித் தொடர்புக் குழு; சொல்ற தகவலைப் புரிஞ்சுகிட்டு, அதுங்க சொன்ன திசையில போயி, தேனை எடுத்து வர்ற பொருள் சேகரிக்கும் குழு; தேனை எடுக்கப் போய், குறிப்பிட்ட பூவுல உட்கார்ந்ததுமே அதுல இருக்கற ஏதாவது ஒரு விஷயத்தால (ரசாயனங்கள் உள்ளிட்டவை) உடம்பு சரியில்லாம போயிடற தேனீக்களுக்கு வைத்தியம் பாக்குற மருத்துவக் குழு; மருத்துவத்துக்கும் பயனில்லாம இறந்து போற தேனீக்களை கூட்டிலிருந்து அப்புறப்படுத்துற துப்புரவு குழு; இளம் தேனீக்களை பராமரிக்கற தாதிக்கள் குழு... இப்படி ஒரு ஒழுங்கோட தேனீக்கள் வாழற வாழ்க்கையைப் பார்த்தா... 'நாமெல்லாம் சும்மா...?'னு வாய்விட்டு உங்களையும் அறியாம கூப்பாடு போட்டுடுவீங்க!

ஒரு கூட்டுல ஆயிரக்கணக்கான தேனீக்கள் இருந்தாலும், ராணித் தேனீ... ஒரே ஒரு ஆண் தேனீயுடன் ஒரே ஒரு முறை மட்டுமே கூடி, வாழ்நாள் முழுவதும் முட்டையிடும். ராணியுடன் கூடின அந்த ஆண் தேனீ, உறவு முடிஞ்சதும் இறந்துடும். அதுக்குப் பிறகு, அந்த ராணி, வேற எந்த ராஜாவோடயும் கூடாது. இப்படியரு ஒழுங்கு... அதுகளோட வாழ்க்கையில இருக்கறதைப் பார்த்தா.... அசந்து போயிடுவீங்க! 

இப்படியெல்லாம் கட்டுப்பாட்டோட வாழற அந்த தேனீக் கூட்டம்... முழுக்க முழுக்க வாழறது தனக்காக இல்லீங்க... உங்களுக்கு, எங்களுக்கு, இன்னும் ஊருபட்ட அளவுல கிடக்கற பல ஜீவராசிகளுக்குனுதான், அதுங்களோட காலம் கரையுது. அதாவது, அயல் மகரந்தச் சேர்க்கை மூலமா தாவர இனங்களை வாழ வைக்குது. ஆடு, மாடு, மனுஷன், புழு, பூச்சினு பல ஜீவராசிகளுக்கும் உணவு கிடைக்கறதே இந்த தாவரங்களாலதானே! 

அதை விவசாயம்கிற பேருல நாம ஒரு தொழிலாக்கி, காலகாலமா செய்துகிட்டிருக்கோம். உலகத்துல இருக்கற அதிஉன்னதமான புனிதத் தொழில்ல... முதல்ல இருக்கற ஒரு தொழில்னா... தேனீக்கள் செய்ற மகரந்த சேர்க்கையைச் சொல்லலாம். கிட்டத்தட்ட அதுக்கு இணையானதுதான்... நாம செய்துகிட்டிருக்கற விவசாயத் தொழில். இது ரெண்டும் இல்லைனா... மனுஷ மக்க மட்டுமில்லீங்க... எந்த ஜீவராசியுமே இங்க உயிர் வாழ முடியாது. அதனால... தேனீப்பூச்சிகளை இந்த உலகத்துல இருக்கற ஒவ்வொரு ஜீவனுமே கைதொழணும் சூரியனுக்கு இணையா...!

ரொம்ப நாளா பூவெடுக்காத மரங்களுக்கு பக்கத்துல தேன் பெட்டியை வச்சா, கொஞ்ச நாள்லயே அந்த மரம் பூவெடுக்கும். அது கொஞ்ச, கொஞ்சமா சேர்த்து வைக்கற தேனும் நமக்குக் கிடைக்கும். இப்படி மகசூலை அதிகரிச்சு... தேன்ங்கற அற்புதமான அமுதத்தையும் கொடுத்து... நமக்காகவே வாழற தேனீக்களுக்கு நாம எவ்வளவு நன்றியுள்ளவங்களா இருக்கணும்.

நன்றி : vikatan.com

No comments:

Post a Comment