Showing posts with label சிறுதானிய சமையல். Show all posts
Showing posts with label சிறுதானிய சமையல். Show all posts

Saturday, 5 March 2016

ஏன் வீழ்ந்தன நம் தானியங்கள்? (தி இந்து கட்டுரை)


‘கருங்கால்
வரகே இருங்கதிர்த்தினையே
சிறுகொடிக்கொள்ளே பொறிகிளர் அவரையொடு
இந்நான்கல்லது உணவும் இல்லை'
- என்று மாங்குடிக் கிழாரால் (புறநானூறு: 335) உயர்த்திக் கூறப்படும் வரகு, தினை போன்ற தவசங்கள் (தானியங்கள்), தமிழகத்தின் வானவாரி (மானம்பாரி) நிலத்தில் விளைந்து மிகுந்த பயனைத் தந்தவை. இன்றைய காலகட்டத்தில் வெறுத்து ஒதுக்கப்பட்டுப் புறக்கணிக்கப்பட்ட இவை, பல பன்னாட்டு நிறுவனங்களால் ஊட்ட மாவுக்காகவும், ஊட்டக் குடிநீராகவும் (Health Drinks) விரும்பி வாங்கப்படுகின்றன.
தானியங்களைப் பொறுத்த அளவில் நஞ்சை (நன்செய்) நிலத்தில் விளைபவை என்றும் புஞ்சை (புன்செய்) நிலத்தில் விளைபவை என்றும் பொதுவாகப் பிரிக்கப்படுகின்றன. ஆறுகள், குளங்களின் வழியே நீரைப் பெற்று உறுதியான பாசன வசதியைக் கொண்ட நிலங்களை, நஞ்சை நிலங்கள் எனலாம். இங்கு விளையும் தானியங்கள் மிகுந்த நீரை எடுத்துக்கொண்டு அதிக அளவு விளைச்சலைக் கொடுக்கும். நெல், கோதுமை, மொக்கைச் சோளம் எனப்படும் மக்காச் சோளம் ஆகியன நன்செய்க்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுப் பன்னெடுங்காலமாக விளைவிக்கப்படுகின்றன.
பாதிக்கு மேற்பட்ட உணவு
வீரிய விதைகள் எனப்படும் ஒட்டு விதை ஆராய்ச்சியும் இந்தப் பயிரினங்களில்தான் நடந்தேறியுள்ளது. ஆனால், தமிழகத்தில் மட்டுமல்லாது உலகம் முழுமைக்கும் பெருமளவு உணவை வழங்குவது என்னவோ, மானாவாரி வேளாண்மைப் பயிர்களே. குறிப்பாக, இந்தியாவில் பாதிக்கு மேற்பட்ட உணவு, மானாவாரி நிலப்பரப்பில் இருந்தே கிடைக்கிறது. அதாவது இந்தியாவில் மொத்த உணவு தானிய விளைச்சல் பரப்பான 14 கோடி ஹெக்டேர் பரப்பளவில் 8.5 கோடி ஹெக்டேர், அதாவது 65 விழுக்காடு நிலத்தில் உணவு தானியங்களே விளைகின்றன.
மானாவாரி நிலங்களுக்கே உரிய புஞ்சைத் தானியங்களான சோளம், கம்பு, கேழ்வரகு, வரகு, சாமை, தினை, குதிரைவாலி, காடைக்கண்ணி போன்றவை மிகக் குறைந்த மழைநீரில் வளர்ந்து விளைச்சல் தருபவை. இவற்றில்கூட வரகு, சாமை, தினை, குதிரைவாலி, காடைக்கண்ணி ஆகிய ஐந்தும் சிறுபுஞ்சைத் தானியங்கள் (minor millets) என்று அழைக்கப்படுகின்றன. இவற்றை அருந்தானியங்கள் என்றும் அழைக்கலாம். ஏனெனில் அவை அரியவையாகவும், அருமையானவையாகவும் இருப்பதுதான்.
குறைந்த நீரே போதும்
உண்மையில் இவை சிறுதானியங்களன்று, பெருமைக்குரிய தானியங்கள். ஏனெனில் இவற்றில் இருக்கும் ஊட்டங்கள் மிகச் சிறப்பானவை. மிகக் குறைந்த நீர், மிக எளிய தொழில்நுட்பம், மிகக் குறைந்த இடுபொருள் செலவு, மிக அதிக ஊட்டம் என்று எல்லா வகையான சிறப்புக் கூறுகளைக் கொண்டிருக்கும் இந்தத் தானியங்களை நமது வேளாண் அறிவியலாளர்களும், அரசுத் துறைகளும் புறக்கணித்துள்ளன.
குறிப்பாக ஒரு கிலோ நெல் விளைவிக்கத் தேவைப்படும் நீர் 1,550 லிட்டர், அதேபோல ஒரு கிலோ கோதுமை விளைவிக்க 750 லிட்டர் நீர் தேவைப்படுகிறது. ஆனால், புஞ்சைத் தானியங் களுக்கு இதில் 10-ல் ஒரு பங்கு நீர்கூடத் தேவையில்லை. பெரிய அணைகள் தேவையில்லை. காடுகளும் பழங்குடிகளும் அழிய வேண்டியதில்லை. ஆழ்துளைக் கிணறு மட்டுமல்ல திறந்த கிணறும் கூடத் தேவையில்லை. ஒரு கிலோ தினை சாகுபடி செய்ய, எவ்வளவு நீர் தேவைப்படும் என்ற ஆய்வுகூட நடத்தப்படவில்லை என்பதுதான் வேடிக்கை. இந்தத் தானியங்கள் மழை நீரை நம்பியே விளைகின்றன.
திட்டமிட்ட புறக்கணிப்பு
பசுமைப் புரட்சியால் பெரிதும் பாதிக்கப் பட்டவை இந்தப் புஞ்சைப் பயிர்கள்தான். பசுமைப் புரட்சியில் நெல்லையும் கோதுமை யையும் குறிவைத்தே ஆராய்ச்சிகள் நடந்தேறின. அத்துடன் அரிசிச் சோறு உண்பதே உயர்ந்த பண்பாடு என்ற பரப்புரையும் விரிவாக்கப்பட்டது. குறிப்பிட்ட மேட்டுக்குடி மக்களின் உணவாக இருந்த அரிசி, யாவருக்குமான உணவாக மாற்றப் பட்டது. பள்ளி உணவுத் திட்டம், பொது வழங்கல் திட்டம் என்று யாவற்றிலும் அரிசியும் கோதுமையுமே கொடுக்கப்பட்டன. ஆராய்ச்சிக்கான ஒதுக்கீடுகள், சாகுபடிக்கான ஒதுக்கீடுகள் என்று அளவற்ற பணம் இதில் முதலீடு செய்யப்பட்டது. இதன் விளைவாக மக்களின் பயன்பாட்டில் இருந்து புஞ்சைத் தானியங்கள் முற்றிலுமாக ஒதுக்கப்பட்டன.
பழங்குடி மக்கள், ‘நாகரிகம்' தொடாத பகுதிகளைச் சேர்ந்த மக்களிடம் மட்டுமே தானியங்களின் பயன்பாடு எஞ்சியிருந்தது. தமிழகத்தில் நாமக்கல், தருமபுரி, மதுரை போன்ற மிக அரிதான இடங்களில் மட்டுமே சாமை, குதிரைவாலி, தினை போன்றவை பயிரிடப்படுகின்றன. இன்றைக்கு மதுரைப் பகுதி மக்கள் தாங்கள் விளைவித்த தானியங்களை விற்றுவிட்டு, நியாய விலைக் கடைகளில் ‘விலையில்லா' அரிசியை வாங்கிச் சமைக்கின்றனர்.
இப்படிப் புறக்கணிக்கப்பட்ட தானியங்களால் ஏற்பட்ட சூழலியல், திணையியல், பொருளியல், பண்பாட்டியல் கேடுகளை இதுவரை யாரும் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்பது வேதனைக்குரியது.

நன்றி : தி இந்து

Tuesday, 23 February 2016

கேழ்வரகு உருண்டை (தி இந்து நாளிதழ்)

Image & article courtesy :tamil.thehindu.com
என்னென்ன தேவை?
கேழ்வரகு மாவு - ஒரு கப்
அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்
பச்சை மிளகாய் - 4
தேங்காய்த் துருவல் - ஒரு கப்
கடலைப் பருப்பு, உளுந்து - ஒரு டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கேழ்வரகு மாவோடு அரிசி மாவு, சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்துப் பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாகப் பிடியுங்கள். அவற்றை இட்லி பாத்திரத்தில் போட்டு வேகவைத்து, ஆறவிடுங்கள். பிறகு அவற்றைக் கொதிக்கும் நீரில் போட்டு ஒரு நிமிடம் வைத்திருந்து, பிறகு தண்ணீரை வடித்துவிடுங்கள்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் கடலைப் பருப்பு, உளுந்து கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். பிறகு தேங்காய்த் துருவல், கேழ்வரகு உருண்டைகளைச் சேர்த்துக் கிளறி இறக்கிவையுங்கள். கேழ்வரகில் களி, கூழ் செய்து கொடுத்தால் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள்கூட இந்தக் கேழ்வரகு உருண்டைகளை ஒரு பிடி பிடிப்பார்கள். 
நன்றி : தி இந்து நாளிதழ்

Monday, 22 February 2016

உடலுக்கு பலம் தரும் கேழ்வரகு (தினகரன்)

Image & Article courtesy : Dinakaran.com
கேழ்வரகு பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. அரிசியை விட அதிக சத்துள்ள அற்புதமான உணவு. அரிசி விரைவில் செரிமானம் ஆகும். கேழ்வரகு மெதுவாக செரிமானம் ஆகி சத்துக்களை கொடுக்கும். கேழ்வரகில் இனிப்போ, காரமோ சேர்த்து உணவாக கொடுக்கும்போது குழந்தைகளுக்கு நல்ல பலத்தை கொடுக்கும். உடலும், மனமும் சோர்வு இல்லாமல் இருக்கும். கேழ்வரகு சத்தூட்ட உணவாக விளங்குகிறது. இதற்கு ‘ராகி’ என்ற பெயரும் உண்டு.


கேழ்வரகை பயன்படுத்தி சிற்றுண்டி தயாரிக்கலாம். இதற்கு தேவையான பொருட்கள்: கேழ்வரகு மாவு, தேங்காய் துருவல், முருங்கை கீரை, மிளகாய் பொடி, வெங்காயம், சீரகப்பொடி, உப்பு, நல்லெண்ணெய். இவை அனைத்தையும் சேர்த்து பிசைந்து வைக்கவும். பாத்திரத்தில் சிறிது நல்லெண்ணெய் விடவும். பிசைந்து வைத்திருந்த மாவை அடையாக தட்டி போடவும். சிறு தீயில் வைத்து மொரு மொரு பதத்தில் எடுக்கவும்.

இதேபோல், கேழ்வரகு மாவுடன் வெல்லம், ஏலக்காய் பொடி, நெய் சேர்த்து இனிப்பு அடை தயாரிக்கலாம். நல்லெண்ணெய்க்கு பதிலாக நெய் சேர்த்துக் கொள்ளவும்.   தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இந்த அடையை கொடுத்துவந்தால், நோய் எதிர்ப்பு சக்தி கூடும். சோர்வு இருக்காது. உடல் பலம் பெரும்.எலும்பை பலப்படுத்தும் உளுந்தம் களி தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: உளுந்தம் மாவு, வெல்லம், ஏலக்காய், நெய். ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு கொதிக்க வைக்கவும்.

ஏலக்காய் பொடி சேர்க்கவும். வறுத்து பொடி பண்ணி வைத்திருக்கும் உளுந்தம் மாவை சேர்த்து நன்றாக கிளறவும். சிறிது நெய் சேர்க்கவும். பின்னர், வெல்லம் சேர்த்து நன்றாக கிளறவும். உளுந்தம் களி பெண் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. இடுப்பு எலும்புகள் பலப்படும். தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். உடலுக்கு பலம் கொடுக்க கூடியது. இட்லி, தோசைக்கு அத்தியாவசிய தேவையாக உளுந்து பயன்படுகிறது.

இதில் புரதம், மினரல் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் உள்ளன. மருத்துவ வேதிப்பொருட்களை உள்ளடக்கியது.  அரிசி மாவு, கடலை பருப்பை பயன்படுத்தி ஆரோக்கிய சிற்றுண்டி தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி மாவு, வேக வைத்த கடலை பருப்பு, வெல்லம், தேங்காய் துருவல், நெய், ஏலக்காய், தேன், பால்.புழுங்கல் அரிசியை கரைசலாக எடுத்து கொதிக்க வைக்கவும்.

கட்டியாக மாறும்போது காய்ச்சிய பால் சேர்க்கவும். சிறிது நெய் சேர்த்து கலக்கவும். கடலை பருப்பு, தேங்காய் துருவல், வெல்லம் சேர்க்கவும். ஏலக்காயை தட்டி போடவும். இளகிய பதம் வந்தவுடன் தேன் சேர்க்கவும். இதை தேர்வுக்கு தயாராகும் குழந்தைகள் சாப்பிடும்போது ஆரோக்கியம் கூடும். தேர்வு சமயத்தில் வீட்டிலேயே இதுபோன்ற உணவுகளை செய்து கொடுப்பது மிகவும் நல்லது.

நன்றி : தினகரன்

Tuesday, 16 February 2016

சிறுதானிய சமையல் (விகடன்) : கலவை தானியக் கூழ்

தேவையானவை:
கம்பு - 1 கப்
கேழ்வரகு - 1 கப்
மோர் - 2 கப்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
Image & article courtesy : Vikatan.com

செய்முறை:
கம்பு, கேழ்வரகை தனித்தனியாக வறுத்து, ஒன்றாகச் சேர்த்து மாவாக அரைக்கவும். மிளகாய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
ஒரு கரண்டி மாவை தண்ணீர்விட்டு கரைத்து, கொதிக்க வைக்கவும், நன்கு வெந்த பின் இறக்கி, ஆற விடவும். மோர், உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து கலக்கி, கூழ் ஆக பரிமாறவும்.

சிறுதானிய சமையல் (விகடன்) : தினைப் பாயசம்

தேவையானவை:
தினை அரிசி - 1 கப்
பனை வெல்லம் - 3/4   கப் 
பால் - 1 கப்
முந்திரிப் பருப்பு - 5
ஏலக்காய்த் தூள் - சிறிதளவு
உலர்ந்த திராட்சை - 5
நெய் - 2 தேக்கரண்டி


Image & article courtesy : Vikatan.com

 செய்முறை:
ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர்விட்டு அதில் தினையைச்  சேர்த்து நன்றாக வேக வைக்கவும். அரிசி நன்றாக வெந்த பின், வெல்லத்தைத் தூளாக்கிப் போடவும். 10 நிமிடம் அதை வேகவிட்டு, பால் சேர்க்கவும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து, அதில் சேர்க்கவும். கடைசியாக, ஒரு கலக்குக் கலக்கி இறக்கும்போது,  ஏலக்காய்த் தூள் போட்டு இறக்கி, சூடாகப் பரிமாறவும்.