Saturday 5 March 2016

சேதாரமின்றி நெல் அவிக்கணும்!

Image & article courtesy : Dinamalar

''விவசாயத்தில் பாரம்பரியத்தை பின்பற்றினாலும் நவீன தொழில்நுட்பத்தை கைப்பிடித்தால்தான், நஷ்டமின்றி லாபம் பார்க்க முடியும்,'' என்கிறார் மதுரை வயலூர் வழி மூலக்குறிச்சியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி. நெல் அவிப்பதிலும் முறையான தொழில்நுட்பத்தை பின்பற்றினால்தான் குருணை அதிகமின்றி முழுஅரிசி பெறமுடியும் என நிரூபித்து காட்டியுள்ளார்.
அவர் கூறியது: ஒரு ஏக்கர் நிலத்தில் நெல்சாகுபடி செய்கிறேன். நிலத்திலேயே ஆடு, மாடு, கோழிகள் வளர்க்கிறேன். அவற்றின் எருக்கள்தான் பயிருக்கு உரங்கள். வேறெந்த ரசாயனமும் சேர்ப்பதில்லை. 2 ஏக்கர் நிலத்தில் பழமரங்கள் வளர்கின்றன. 100க்கு 100 சதுர அடியில் குளம் அமைத்து கட்லா, மிர்கால், ரோகு ரகங்கள் வளர்க்கிறேன். கோழி என்றால் பிராய்லர் ரகமில்லை. பாரம்பரிய நாட்டுரகக் கோழிக் குஞ்சுகள் வளர்க்கிறேன்.
இரண்டு முறை நெல் சாகுபடி செய்து நெல்லை அப்படியே ரைஸ்மில்லுக்கு அனுப்பிவிட்டேன். குருணை அதிகமாக இருந்தது. இதை குறைப்பதற்கு மதுரை விவசாய கல்லுாரி வேளாண் அறிவியல் மையத்தை அணுகினேன். அங்கே 'டபுள் பாய்லிங்' முறையில் நெல் அவிப்பதை தெரிந்து கொண்டேன். அதேபோல சொந்தமாக பாய்லர் தயாரித்தேன்.
சாதாரணமாக இட்லி அவிக்கும் முறைதான். பாய்லரின் அடியில் தண்ணீரை ஊற்றி அதன் மேல் தட்டு வைத்து 100 கிலோ நெல்லை கொட்ட வேண்டும். நடுவில் இரும்புக்குழாய், பக்கக்குழாய்களுடன் கம்பிபோன்ற துளைகள் இடப்பட்டிருக்கும். பாய்லரை மூடி அடுப்பை பற்ற வைத்தால் ஆவியின் மூலம் முக்கால் மணி நேரத்தில் 100 கிலோ நெல்லும் ஒரே சீராக வெந்துவிடும்.
தண்ணீரை வடிக்க வேண்டிய அவசியமில்லை. பக்கவாட்டில் உள்ள மதகை திறந்து நெல்லை வெளியே எடுத்தால் ஒரு மணி நேரத்தில் காய்ந்து விடும். நெல்லும் மண் இன்றி சுத்தமாக இருக்கும். ஒரு ஏக்கரில் விளைந்த நெல்லை இம்முறையில் எளிதாக அவித்து ரைஸ்மில்லுக்கு அனுப்பினேன்.
நுாறு கிலோவுக்கு அதிகபட்சமாக மூன்றுகிலோ அளவே குருணை கிடைக்கிறது. அரிசியை பட்டை தீட்டாததால் அதன் முனையில் உள்ள சத்துக்களும் குறைவதில்லை, என்றார். இவரிடம் பேச: 94431 49166.
நன்றி : தினமலர்

No comments:

Post a Comment