Saturday 27 May 2017

தொழிற்சாலைகளில் முருங்கையின் பயன்பாடுகள்.

தொழிற்சாலைகளில் முருங்கையின் பயன்பாடுகள்.

மொருங்கேசியே குடும்பத்தைச் சார்ந்த மொரிங்கா ஒலிஃபெரா எனும் தாவரவியல் பெயர் கொண்ட முருங்கை, ஒரு மென்தண்டுகளுடைய அழகான தாவரமாகும். இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட இப்பயிர் வட இந்தியாவில் இமயமலையை சார்ந்த பகுதிகளும், உலகளவில் வெப்பமண்டல மற்றும் மித வெப்பமண்டலப் பகுதிகளில் வளர்கின்றது. இதன் சத்து நிறைந்த கீரைக்காகவும் மென்மையான காய்களுக்காகவும் இந்திய துணைக்கண்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பயிரடப்படுகின்றது. இதன் மணம் நிறைந்த காய்கள் மிகப்பிரபலமானவை. தென்னிந்தியாவில் இரண்டு மில்லியனுக்கு மேற்பட்ட வீடுகளில் வீட்டுத் தோட்டப்பயிராக இது வளர்க்கப்படுகிறது. வேளாண்மை, மருத்துவம் மற்றும் தொழிற்சாலைப் பயன்பாடுகளால், முருங்கை தொன்மை வாய்ந்த இலக்கிய குறிப்புகளிலும் இடம் பெற்றுள்ளது. (இராஜாங்கம் மற்றும் குழு, 2001).


Image courtesy : Wikipedia
தொழிற்சாலையில் முருங்கையின் பயன்பாடுகள்
முருங்கை எண்ணைய்
முருங்கையில் தோல் நீக்கப்பட்ட விதையில் 42 சதம் எண்ணைய் இருக்கிறது. எண்ணைய் தெளிவான மஞ்சள் நிறமுடையது. இந்த எண்ணைய் மிகவும் நுட்பமான கடிகாரம் போன்ற இயந்திரங்களுக்குப் பயன்படுத்தப்படும் இசைவு எண்ணையாகச் செயல்படுகிறது. முருங்கை எண்ணைய் மிகக் குறைந்த அளவே வழவழப்புடையதாக இருப்பதால் எளிதில் கெட்டுப் போவதில்லை. (பெராரோ மற்றும் பெராரோ, 1990, இராமசந்திரன் மற்றும் குழு, 1980). முருங்கை எண்ணெய் சமையலுக்கும் பயன்படுத்தப்படுகின்றது. எளிதில் ஆவியாகக் கூடிய வேதிப் பொருட்களை உறிஞ்சி, அதிக நேரம் தக்க வைத்துக் கொள்ளும் குணமுடையதால், முருங்கை எண்ணெய் 'சென்ட்' எனப்படும் வாசனை திரவியங்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றது. முருங்கை எண்ணையில் 0.5 முதல் 3.0 சதம் வரை எளிய கொழுப்பு அமிலம் உள்ளது. முருங்கை விதை எண்ணையில் 13 சதம் நிறைவடைந்த கொழுப்பு அமிலமும் 82 சதம் நிறைவில்லாக் கொழுப்பு அமிலமும் உள்ளன. இது அதிகபட்சமாக 70 சதம் ஒலியிக் அமிலம் கொண்டுள்ளது. ஆனால் பிற காய்கறி எண்ணையில் 40 சதம் மட்டுமே ஒலியிக் அமிலம் இருக்கிறது.

நீரைத் தூய்மைப்படுத்துதல்.
முருங்கை விதையில் 30-42 சதம் வரை எண்ணைய் உள்ளது. இதன் புண்ணாக்கு புரதச் சத்து நிறைந்தது ஆகும். இந்தப் புரதத்தில் சுமார் 1 சதவீதம் 7-17 கி டால்டன் மூலக்கூறு எடை கொண்ட நேர்மின் திறனுடைய பாலி எலக்ட்ரோலைட்டுகள் ஆகும். இந்த நேர்மின் திறனுடைய பாலி எலக்ட்ரோலைட்டுகள் மண் துகள்கள் மற்றும் அசுத்தம் நிறைந்த நீரில் உள்ள எதிர் மின் சுமையுடைய கூழ்மத்துகள்களை உறிஞ்சுவதால் தண்ணீரைத் தூய்மைப்படுத்துகின்றன. எனவே முருங்கைப்புரதத்தினை குடிநீரைச் சுத்தப்படுத்தவும், எண்ணைய் பொருட்களைத் தூய்மைப்படுத்தவும், குளிர்பானங்களில் உள்ள நார்ப்பொருட்களைப் பிரித்தெடுக்கவும் ஒரு சிறந்த பக்க விளைவில்லாத இயற்கை பிரிப்பானாகப் பயன்படுத்தலாம். ஆனால் அலுமினா போன்ற செயற்கைப் பிரிப்பான்கள் விஷத்தன்மை வாய்ந்தவை. மேலும் இது போன்ற செயற்கை பொருட்களைப் பயன்படுத்துவதற்கு முறையான பயிற்சியும் அதிக செலவும் தேவைப்படுகின்றது.

சீனாவில் பல்லாண்டுகளாக முருங்கைப் புரதப்பொருட்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின்போது, இக்குறிப்புகள் பல்வேறு நாடுகளிலும் பரவின, எகிப்திலும் சூடான் நாட்டிலும் குடிநீராகப் பயன்படுத்தப்பட்ட நைல் நதி நீரைத் தூய்மைப்படுத்தி முருங்கைப் புரதம் பயன்படுத்தப்பட்டது.

முருங்கை விதையில் தோலுறித்தபின், கொட்டைகளைப் பொடியாக்கி, இந்தப் பொடியை அசுத்தமான நீரில் சேகரித்து, 5 நிமிடம் வரை நன்றாகக் கலக்க வேண்டும். பின்பு அரை மணி நேரம் கழித்து, சுத்தமான துணியில் வடிகட்டினால் தூய்மையான நீர் கிடைக்கும். மாற்றுவழியாக, ஒரு துணியில் முருங்கைவிதைப் பொடியைக் கட்டி, அதனை தூய்மைப்படுத்தப்பட வேண்டிய நீரில் இரவு முழுவதும் ஊறவிடவேண்டும். பின்பு பொடி கொண்ட துணியை நீக்கிவிட்டு, நீரை வடிகட்டினால் தூய்மையான நீரைப்பெறலாம். இம்முறையால் சுமார் 99 சதம் வரை அசுத்தங்களை நீக்க முடியம். சுமாரான அசுத்தமுடைய நீர் எனில் ஒரு லிட்டர் நீருக்கு ஒரே ஒரு விதையும், மிகவும் அசுத்தமுள்ள நீருக்கு இரண்டு விதைகளும் தேவைப்படும். எண்ணைய் நீக்கப்பட்ட புண்ணாக்கினை நீரைத் தூய்மைப்படுத்துவதற்கு உபயோகிக்கலாம்.

சமீப காலத்தில் கழிவு நீரைத் தூய்மைப்படுத்துவதற்கு ஏற்ற மலிவான உள்ளூர் பொருட்கள் குறித்த ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே பின்பற்றப்பட்டு வரும் கழிவு நீர்த் தூய்மைப்படுத்தும் முறையில் தாதுப் பொருட்கள் சரியாக நீக்கப்படாமை, அதிக செலவு மற்றும் அதிக சக்தித் தேவை போன்ற இடர்பாடுகளால், முருங்கைப் பொடி போன்ற இயற்கைப் பொருட்களின் அவசியம் நன்கு உணரப்பட்டுள்ளது. தற்போது ஆராய்ச்சி குறிப்புகள் மூலம் நீர் நிலைகளில் உள்ள கடினமான தாதுப்பொருட்கள் மற்றும் ஆவியாகக்கூடிய அங்ககச் சேர்மங்களை நீக்குதிலின் முருங்கையின் விதைகளும் காய்களும் எவ்விதம் பயன்படுகின்றன எனத் தெரிய வருகிறது.
(அக்கார் மற்றும் குழு 2006, கர்மா மற்றும் குழு 2006).

முருங்கை இலைப்பொடி
முருங்கை இலைப்பொடி, கேப்சூல்களாக விற்பனை செய்யப்படுகின்றது. இதற்கென தனித் தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. இந்தியாவிலும், வெளிநாடுவாழ் இந்திய மக்கள் குடியிருப்பு பகுதிகளிலும் முருங்கையிலைப் பொடி கலந்த சாம்பார் பொடிகள் பிரபலமடைந்து வருகின்றன.

தமிழ்நாடு வேளாண் பல்கலை கழக வெளியீடான Moringa book - Tamil லிருந்து மறு உருவாக்கம் செய்யப்பட்டது.  

Sunday 7 May 2017

முருங்கையில் பூ உயிரியியல் மற்றும் வீரிய ஒட்டுத்தன்மை

முருங்கையில் பூ உயிரியியல் மற்றும் வீரிய ஒட்டுத்தன்மை


பூ உயிரியியல்
முருங்கை பூக்கள் வெள்ளை நிறத்தில் மணமுடையதாகவும் பூக்காம்புகள் நீளமாகவும் படர்ந்தும் காணப்படும். பூவிலைக் காம்புகள் ஐந்து இருக்கும். அவை மடங்கியும் கூர்மையுடையதாகவும் வெளிப்புறத்தில் குழல் போன்று வளைந்து காணப்படும். பூ மடல்கள் ஐந்து காணப்படும் அவை தனியே குறுகி மடல் போன்று காணப்படும். மகரந்ததாள் மஞ்சள் நிறத்தில் ஐந்து காணப்படும். மகரந்தக்காம்புகள் நீண்டு காணப்படும். கருவறைகள் மூன்று காணப்படும். காய்கள் 30 முதல் 120 செ.மீ நீளமுடையதாகும். முக்கோண வடிவில் நீண்டு 13 முதல் 22 விதைகள் உடையதாக காணப்படும்.

Image courtesy : Wikipedia
பூ மலருதல்
முருங்கையில் அதிகாலை 4.30 முதல் 6.30 வரை பூக்கள் மலரும். மிக முக்கியமாக 5.30 மணிக்கு அதிகப்படியான வளர்ச்சி இருக்கும். பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டதில் பூ மலரும் நேரம் அதிகாலை 5.00 மணி முதல் 9.00 மணி வரை என்றும், 27.3o செ - 29.3o செ. மற்றும் காற்றின் ஈரப்பதம் 68 முதல் 78 சதவீதம் பூ மலர்ச்சிக்கு பெரிதும் துணை செய்கிறது என்றும் கண்டறிந்துள்ளனர். மகரந்தத் தாளில் மிகவும் நீளமான மகரந்தத்தாள் முதலில் மலர்கிறது. மகரந்தத்தூள் முதிர்ச்சியடைந்த நிலையில் பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். மலர்ந்த நிலையில் மகரந்ததூள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். ஒரு மகரந்ததூளில் சுமார் 7,400 மகரந்ததூள்கள் இருக்கும்.

சூல்முடிபூ மலர்வதற்கு ஒருநாள் முன்பும் பின்னர் மலர்ந்த நாள் அன்றும் ஏற்புத்தன்மை உடையதாய் இருக்கும். அதனால் அயல்மகரந்தச்சேர்க்கை தேனீக்கள் மற்றும் ஈக்களினால் நடைபெறுகிறது. சுமார் 72 சதவீதம் மகரந்தம் உயிருடன் இருக்கும். இதன் குரோமோசோம் எண்ணிக்கை 28 ஆகும்.

மகரந்தச்சேர்க்கை
முருங்கையில் பெரும்பாலும் அயல்மகரந்தச்சேர்க்கையே நடைபெறுகிறது. ஈக்கள், பூச்சிகள், கொசு அயல் மகரந்தச்சேர்க்கைக்கு பெரிதும் துணைபுரிகின்றன. பூ மலர்வதற்கு முதல் நாள் பூவிலுள்ள மகரந்தத் தாளினை நீக்கம் செய்ய வேண்டும். பின்னர் மறுநாள் காலையில் 11 மணிக்கு முன்னர் ஆண் மரத்திலிருந்து மகரந்தத்தை சேகரித்து, மகரந்தத்தாள் நீக்கின பெண் தாவரத்தின் பூவில் மகரந்தச்சேர்க்கை செய்யவேண்டும். பின்னர் பை கொண்டு மகரந்தச் சேர்க்கை நடைபெற்ற மலரினை மூடிவிட வேண்டும். 4-5 நாட்கள் கழித்து பூவிலிருந்து பிஞ்சு வெளிவந்தவுடன் பையினை நீக்கி அட்டையினால் அடையாளம் இட வேண்டும். மேற்கூறிய முறையில் அதிக எண்ணிக்கையில் வீரிய ஒட்டு காய்களை உருவாக்கலாம்.

பொதுவாக முருங்கையில் ஜனவரி முதல் ஏப்ரல் மாதத்தில் பூக்கள் தோன்றும் அதிகப்படியான பூக்கள் பிப்ரவரி மாதத்தில் தோன்றும். பூக்கள் வெண்மை நிறத்தில் இருக்கும். பூவிதழ்கள் ஒரே மாதிரியான உயரத்தில் இருக்கும். பூவிலிருந்து ஒரு வித வாசனை உண்டாகும். காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை பூக்கள் மலரும் அதன் பின்னர் மகரந்தத்தாள் வெடிக்கும் மற்றும் தேன் சுரப்பது ஆரம்பிக்கும் வெடித்த மகரந்தத்தாளிலிருந்து கொத்து கொத்தாக மகரந்தத்தூள்கள் வெளியேறும் இவை பூச்சிகளினால் கவரப்பட்டு மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது. பூச்சிகளில் சைலோகோப்பா என்கின்ற பூச்சியின் கால்களில் மகரந்தத் தூள் அதிகளவில் ஒட்டிக்கொண்டு மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது. இவை தவிர தட்டுப்பூச்சி ஒரு வித எறும்புகள் மற்றும் லெப்பிடாப்டிரா வகையை சார்ந்த பூச்சிகளும் மகரந்தச்சேர்க்கைக்கு பெரிதும் உதவுகின்றன. சூல்முடி பூ மலரும் தருணத்தில் மகரந்ததாள் உயரத்திலேயே இருக்கும் அதனால் பின்னர் சிறிது சிறிதாக வளர்ந்து மகரந்ததாளை விட அதிக உயரத்தில் காணப்படும். பூ விரிந்து ஒரு சில மணி நேரங்களிலேயே இவ்வளர்ச்சி காணப்படுவதால் மகரந்தச்சேர்க்கைக்கு அந்நிய காரணிகளில் தேவை முருங்கை மரத்திற்கு காணப்படுகிறது.

முருங்கையில் பூ உயிரியல் பற்றிய ஆராய்ச்சி
கால்டாஸ் (2000) என்ற அறிஞர் முருங்கையில் மகரந்தச்சேர்க்கைக்கும் அதன் மூலம் காய் உற்பத்திக்கும் வெளிப்புற காரணிகளான பூச்சிகள் மற்றும் காற்று போன்றவை மிக அவசியம் என்று கண்டறிந்துள்ளார்.

விசாகப்பட்டினத்தில் முருங்கையில் இரண்டு பருவங்களில் பூ மலர்ச்சி உண்டாகிறது என்று ஜோதி மற்றும் குழுவினர் (1990) கண்டறிந்துள்ளனர். அவை முறையே பிப்ரவரி முதல் மே மாதம் முடிய மற்றும் செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் முடிய என்றும் கார்பெண்டர் ஈக்கள் மகரந்தச்சேர்க்கைக்கு பெரிதும் உதவி செய்கின்றன என்றும் கண்டறிந்துள்ளனர்.

பாபு மற்றும் ராஜன் என்பவர்கள் (1996) முருங்கை மரத்தில் பூக்கும் பருவம் மகரந்தத்தின் தன்மைகள் பற்றி ஆகஸ்ட் 1995 முதல் ஜனவரி 1996 வரை ஆராய்ச்சி செய்து முடிவுகளை வெளியிட்டுள்ளனர். அதன்படி முருங்கை மரம் ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை முதலில் பூக்கிறது பின்னர் டிசம்பர் முதல் ஜனவரி வரை பூக்கிறது.பூக்களில் மகரந்தத்தூள்கள் முதலில் முதிர்ச்சியடைகின்றன, பின்னர் பூ மலர்ச்சி சூல்முடி முதிர்ச்சி நடைபெறுகிறது. பூக்கள் 14.30 முதல் 9.00 மணி முடிய மலர்கின்றன. ஆகஸ்ட் முதல் செப்டம்பர் மாதம் வரை பூக்கும் பூக்களில் மகரந்தத்தாள் அதிகம் வெடிப்பதில்லை ஏனெனில் குளிர் அதிகம் நிலவுவதால் மகரந்தத்தாளில் ஈரத்தன்மை காணப்படுகிறது. இதனால் மகரந்தச்சேர்க்கைக்கு பெரிதும் பாதிக்கப்படுகிறது. ஆனால் கருப்பு எறும்புகள் மற்றும் வண்டுகள் மகரந்தச்சேர்க்கைக்கு உதவி செய்கின்றன என்றும் கண்டறிந்துள்ளார்.


தமிழ்நாடு வேளாண் பல்கலை கழக வெளியீடான Moringa book - Tamil லிருந்து மறு உருவாக்கம் செய்யப்பட்டது. 

Saturday 6 May 2017

முருங்கையில் பூக்களை அதிகப்படுத்த மண் மற்றும் நீர் மேலாண்மை.

முருங்கையில் பூக்களை அதிகப்படுத்த மண் மற்றும் நீர் மேலாண்மை.

முருங்கை மரம் ஒரு வெப்ப மண்டலத்தை சார்ந்த பயிராதலால் வெப்பத்தை தாங்கி வளரக்கூடிய பண்புகள் உள்ளது. பல்லாண்டு மர முருங்கை மரத்தின் தண்டுகளில் நீரை சேமிக்ககூடிய செல்கள் உள்ளன. மேலும் இவற்றில் இலைவழி நீராவியாதல் மிகவும் குறைவாக காணப்படுகிறது. அதிக குளிர் காலங்களில் இவற்றின் இலைகள் உதிர்ந்து விடுகின்றது. மேலும் பிஞ்சிலிருந்து உருவாகக் கூடிய காய்களில் பச்சையம் இருப்பதால் ஒளிச்சேர்க்கை நடைபெற்று தனக்கு தேவையான உணவினை தயாரித்துக் கொள்கின்றன. இதனால் வறட்சி காலங்களில் கூட மரத்தில் காய்கள் அதிகம் உதிர்ந்து விடுவதில்லை.

அதிகம் நீர் தேங்காத வடிகால் வசதியுடைய செம்மண், மணல் கலந்த களி, செம்புரை மண், மணற்பாங்கான நிலங்களில் முருங்கை நன்கு செழித்து வளர்கிறது. முருங்கையின் வேர்கள் நீர் தேக்கத்தைத் தாங்கிக் கொள்வதில்லை. முருங்கை மரத்திற்கு 10-15 நாட்கள் இடைவெளியில் நீர்பாய்ச்சலாம். மண்ணின் தன்மை, தட்பவெப்ப சூழ்நிலைகளைப் பொறுத்து நீர் பாய்ச்சுதலை அதிகப்படுத்தலாம்.

Image courtesy : wikipedia

மண்ணில் ஈரப்பதத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு குறைத்துக் கொண்டால் இலைகள் உற்பத்தி குறைந்து, பூ மொட்டுகள் உருவாவது அதிகமாகிறது. பூ உற்பத்தியாவதற்கு நீர் பற்றாக்குறை அவசியம். ஆனால் பூக்கள் அதிகம் தோன்றியவுடன் நீர்ப்பாய்ச்சுதலை குறைத்தால் காய்கள் உற்பத்தி பாதிக்கப்படும், மகரந்தம் கருகி மகரந்தச் சேர்க்கை பாதிக்கப்படும். அதனால் மண்ணின் காரணிகளைப் பொறுத்து 7 முதல் 10 நாட்கள் இடைவெளியில் நீர்ப்பாய்ச்சுவதினால் காய்ப்பிடிக்கும் தன்மையினையை அதிகப்படுத்தலாம். காய் முதிரும் பருவத்தில் மிதமான நீர் பாய்ச்சுதல் அவசியம். ஏனெனில் காய்களில் நீர் கோர்த்து அறுவடைக்கு பிந்திய நிலைப்புத் தன்மை பாதிக்கப்படும், காய்கள் முதிரும் பருவத்தில் நீர்ப்பாய்ச்சுதலை அறவே தவிர்க்க வேண்டும். இதனால் விதை உற்பத்தி அதிகரிக்கும்.

முருங்கை மரத்தின் தூர் பகுதியினை எப்பொழுதுமே சுத்தமாக வைத்திருப்பது அவசியம். இதற்கு மண் அணைத்து அடிப்பகுதியை மேடு போன்று ஆக்குவதினால் தண்டு துளைப்பான் மற்றும் கரையான்களிலிருந்து பாதுகாக்கலாம். மரத்தின் வேர்கள் மிகவும் மென்மையாக இருப்பதினால் அதிக காற்று அடித்தால் மரம் வேருடன் சாய்ந்து விடுகிறது, மேலும் வேர்ப்பகுதியும் பாதிக்கப்படுகிறது. இதற்கு பாத்திகட்டி நீர்ப்பாய்ச்சுவதினாலோ அல்லது வாய்க்கால் வழி நீர் பாய்ச்சுவதினாலோ வேருடன் நீரின் நேரடி தொடர்பினை தவிர்க்கலாம். இதனால் வேர் பாதிப்படைவது தவிர்க்கப்படுகிறது.

சொட்டு நீர் வழி பாய்ச்சும் பொழுது, சொட்டு நீர் குழாய்களை மரத்திலிருந்து 1 முதல் 1.5 அடி தூரத்தில் வைப்பதினால் வேருக்கு ஏற்படும் பாதிப்பினை குறைக்கலாம். உழவியல் முறைகளான கோடை உழவு, அகலப்படுக்கை அமைத்தல், சொட்டு நீர்ப்பாசனம், நிலப்போர்வை அமைத்தல், இயற்கை உரங்களை அளித்தல், கரிம அமிலங்களை அளிப்பதினால் முருங்கையில் மண், நீர் மேலாண்மையை திறம்படுத்தலாம். இதனால் முருங்கையில் அதிக பூக்கள் உருவாகி உற்பத்தி அதிகரிக்கிறது.

தமிழ்நாடு வேளாண் பல்கலை கழக வெளியீடான Moringa book - Tamil லிருந்து மறு உருவாக்கம் செய்யப்பட்டது.